Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: சிவசேனா தனித்துப் போட்டி

செப்டம்பர் 16, 2019 07:12

மும்பை: மஹாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல், சிவசேனா தனித்து போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மஹாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலில் 144 தொகுதிகளில் போட்டியிட சிவசேனா விரும்பியது. ஆனால் சரிசமமான தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டிய பாஜக 106 தொகுதிகளை மட்டுமே சிவசேனாவுக்கு ஒதுக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குறைந்த பட்சம் 120 தொகுதிகளையாவது தங்களுக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தால் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை வகிக்கவும் சிவசேனா கோரியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டில் இதுவரை உடன்பாடு எட்டப்படாததால், கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்குமாறு கட்சியினருக்கு சிவசேனா தலைவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்தும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இதுகுறித்து ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 122 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்த நிலையில், சிவசேனா 63 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்